May 27, 2025
This blog explores how Jaffna University students are using creative approaches such as social media campaigns, cultural exchange, and student-led initiatives to promote social cohesion and understanding.
இலங்கையில் சமூக நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதில் பல்வேறுபட்ட மூலங்கள்; குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை செய்கின்றன. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் அத்தகைய ஒரு ஆதாரமாகும். யுனெஸ்கோ நிறுவனம், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய பங்குதாரர் கொள்கை உரையாடலின் போது இந்த மாணவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்வு இலங்கை முழுவதுமுள்ள 17 பல்கலைக்கழகங்களிலும் சமூக நல்லிணக்க மையங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மேலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து, இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது. பலதரப்பட்ட சமூகங்களிடையே சமூக நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போது, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் பெரும்பான்மையானவை சிறிய உந்துதல் மூலம் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள முடியுமானவையாக இருந்தன. இது பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
வெவ்வேறு சமூக மற்றும் புவியியல் பின்னணியிலிருந்து வந்த அவர்கள், பல்கலைக்கழகத்தில் நுழைய முன், யாழ்ப்பாணத்தை பற்றியும் யாழ் பல்கலைக்கழகத்தை பற்றியும் தமக்கு எதிர்மறையான பிம்பம் இருந்ததாக குறிப்பிட்டனர். எனினும், உள்ளூர் கலாச்சாரத்தில் தங்களை மூழ்கடித்து, அதை நேரடியாக அனுபவித்த பிறகு, தங்கள் முன்முடிவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாட்டை உணர்ந்துள்ளனர். இதற்கு சமூக ஊடகங்கள் மூலம் வெளியாகும் எதிர்மறையான செய்திகளே காரணம் என அவர்கள் கருதுகின்றனர். யாழ்ப்பாணம் தொடர்பான செய்திகள் பெரும்பாலும் அரசியல் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்பட்ட எதிர்மறையான சம்பவங்களைச் சுற்றியே சுழன்று, நீடித்த எதிர்மறை எண்ணத்தை உருவாக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாணத்தின் அழகு, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட நேர்மறையான அம்சங்களை வெளிப்படுத்த சமூக ஊடகங்களை ஒரு தளமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாணவர்கள் உணர்ந்துள்ளனர். இந்த உணர்தலின் உந்துதலால், தமது சமூக ஊடகங்களில் தங்கள் முன்னோக்குகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை சரிசெய்யும் கருத்துக்களையும் வெளியிட ஆரம்பித்துள்ளனர்;. இந்த அணுகுமுறை பரந்த சமூகத்துடன் நேர்மறையான தொடர்புகளை வளர்க்கும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். அவ்வாறு செய்வதன் மூலம் நல்லிணக்க முயற்சிகளை வலுப்படுத்த முடியும் என்பது அவர்களின் கருத்து.
இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முக்கிய கேந்திர புள்ளிகளான வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் கள விஜயங்களின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் மேலும் கலந்துரையாடினர். இப் பிராந்தியங்களில் இருந்து தனிநபர்கள் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதினால், அதனை ஊக்குவிக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். அப் பிராந்தியங்களிலிருந்து வருகை தந்த மாணவர்களை தவிர மற்றைய மாணவர்களுக்கு பிற மாகாணங்களின் இன, மத, கலாசார மற்றும் பாரம்பரியம் குறித்து இருக்கும் தெளிவற்ற அல்லது தவறான கருத்துப்போக்குகளை அகற்றுவதே இதன் நோக்கமாகும் என அவர்கள் குறிப்பிட்டனர். இதன் மூலம் குழுக்களாக பிளவுபடாமல் இலங்கையர் என்ற உணர்வை மக்கள் மத்தியில் வளர்க்க முடியும் எனவும் தற்போழுது மக்கள் பெரும்பாலும் இன, மத குழுக்களாக அதிகமாக பிளவுபடுவதாக தாம் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கருத்தானது ஸ்ரீ லங்கா பரோமீட்டரின் நல்லிணக்கம் தொடர்பான தேசியளவிலான பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளம் மற்றும் உரித்துடைமை என்ற பரிணாமத்தின் கீழ் குழு அடையாளங்களுக்கான மூலங்களின் கண்டடைவுகளுடன் ஒத்துப்போகின்ற அதேவேளை ஏனைய இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களுடன் பழகுவதற்கான பிரதான தடையின் கண்டடைவுகளுடன் முரண்பாட்டை காட்டுகின்றது. தரவுகளின் படி “எந்தக் குழுவுடன் நீங்கள் உங்களை வலுவாக அடையாளப்படுத்திக்கொள்கின்றீர்கள்” எனும் கேள்விக்கு 2023ஆம் ஆண்டில் “இலங்கையர்” (10.3%) என பதிலளித்தவர்களின் எண்ணிக்கையானது தமது இனக்குழு (2023ஆம் ஆண்டில் 15.9%) என பதிலளித்தவர்களின் அளவை விட குறைவாகும். ஏறத்தாழ ஐந்தில் ஒரு இலங்கையர்கள் தம்மைத் தொடர்ந்தும் தமது இனக்குழுவுடன் வலுவாக அடையாளப்படுத்துகின்றனர். அத்துடன் 2023 இல் நாடளாவிய ரீதியில் ஏனைய இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களுடன் பழகுவதற்கு பிரதான தடையாக குறிப்பிடப்பட்ட பதில்களில், “பழகுவதற்கு போதிய வாய்ப்புக்கள் இல்லை” என 6 சதவீதமானவர்களே குறிப்பிட்டிருந்த அதேவேளை “மொழித்தடை” (41.7%) மற்றும் “தடையேதும் இல்லை” (21.8%) என்கின்ற பதில்களே அதிகம் குறிப்பிடப்பட்டிருந்தன. இக்கருத்தானது பொது மக்களின் பெரும்பான்மை கணிப்புடன் ஒத்து போகாவிட்டாலும் இதை மாணவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அவர்கள் தமக்குள் பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் மொழியை தடையாக பார்ப்பதில்லை எனும் விடயமானது கருத்தில்கொள்ளப்பட வேண்டியது.
மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழக விரிவுரையாரல்களால், சமூக ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு முன்மாதிரியாக, ஆரம்பிக்கப்பட்டுள்ள 'சமூக சமையலறை' எனும் புதிய முயற்சியையும் அது அடிப்படையிலான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். சமூக சமையலறை என்பது பல்கலைக்கழக மாணவர்களிடையே உணவுப் பாதுகாப்பின்மையை மற்றும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மாணவர்களுக்கு இரு வேளை உணவை வரையறையற்ற முறையில் இலவசமாக வழங்கும் ஒரு முன்னெடுப்பாகும். இதற்கான முக்கிய காரணமாவது, நாட்டின் பொருளாதார சவால்களால் பல மாணவர்கள் ஒரு நாளைக்கு போதுமான உணவை வாங்க முடியாமல் போராடுகிறார்கள். சிலருக்கு ஒரு வேளை அல்லது அதற்கும் குறைவான உணவை மட்டுமே உண்ண முடிகிறது. எனவே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இலவச உணவை வழங்குவதற்காக சமூக சமையலறைகளைத் தொடங்கினர். இந்த முயற்சிக்கு விரிவுரையாளர்கள் தங்கள் சொந்த நிதியில் இருந்து பங்களிக்கின்றனர். ஏறத்தாழ 75% பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இது இன்றியமையாததாக அமைந்துள்ளது. அதிக தேவை காரணமாக, மாணவர்களின் வரிசைகள் பெரும்பாலும் தினசரி தன்சலைகளை ஒத்திருக்கும். முன்பு காலை மற்றும் மதிய உணவு இல்லாமல், பிஸ்கட் பக்கெட்டை மட்டுமே நம்பியிருந்த மாணவர்களுக்கு இது ஒரு முக்கிய ஆதரவு அமைப்பாக செயல்படுகிறது. மாணவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை வளர்ப்பதிலும் சமூக சமையலறை முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறான முன்னெடுப்புக்கள் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இன, மத மற்றும் குலத்தை தாண்டிய நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் எனவும் பரிந்துரைத்தனர்.
தற்போது 25+ வயதாகும் யாழ்.பல்கலைக்கழகத்தின் சிங்கள இனத்தை சேர்ந்த சில மாணவர் பிரதிநிதிகள், அண்மையில் தமிழ்க் கலாசார திருமணம் மற்றும் முஸ்லிம் கலாசார திருமணங்கள் இரண்டிலும் கலந்து கொண்டதுடன், இந்தக் கலாச்சார நிகழ்வுகளில் தங்களது முதல் அனுபவத்தைக் குறிப்பிட்டனர். கலாச்சார ரீதியாக பன்முகப்பட்ட நாட்டில் வாழ்ந்தாலும், இந்த குறிப்பிட்ட மரபுகளை சந்திக்க அவர்களுக்கு 26 ஆண்டுகள் ஆனதாக குறிப்பிட்டனர். இந்த உணர்தல், மென்மேலும் கலாச்சார அனுபவங்களைத் தேடுவதிலும், தழுவுவதிலும், மதிப்பதிலும் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக வாதிடுவதிலும் அவர்களைத் தூண்டியது.
பல்கலைக்கழக மாணவர்களாகிய அவர்களுக்கு இந்த திருமணங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கல்வி அமைப்புகளுக்கு வெளியே உள்ள பல நபர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். சமூக ஊடகங்களில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், பெரியவர்கள், சகாக்கள் மற்றும் இளைய நபர்கள் உட்பட தங்கள் சமூகத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் இது ஒரு புதுமையான சந்திப்பு என்பதனை தங்கள் வீடியோ பதிவிற்கு சகோதர சமூக மக்களிடமிருந்து கிடைத்த கருத்துரைகளிலிருந்து கண்டறிந்தனர். எனவே, அவர்கள் தடைகளை அகற்றி நல்லிணக்கத்தை மேம்படுத்தி அதிக கலாச்சார புரிதலை வளர்க்க விரும்புகிறார்கள்.
இக் கருத்துக்களை, ஸ்ரீ லங்கா பரோமீட்டரின் சமூக நம்பிக்கை மற்றும் மதரீதியிலான சகிப்பின்மை தொடர்புடைய தரவுகள் வலியுறுத்துகிறன. ஸ்ரீ லங்கா பரோமீட்டரின் தரவுகளின் படி இலங்கையில் வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையில், 2020 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதியில், தேசியளவில், 0.8 புள்ளிகள் அதிகரிப்பு காணப்படுகின்றது. அத்துடன் மதரீதியான சகிப்புத்தன்மையின்மையானது தேசிய அளவில் 4.5 என்ற சராசரிப் புள்ளியுடன் மிதமான போக்கினைக் கொண்டிருப்பதனை கண்டடைவுகள் காட்டுகின்றன. எனினும் மாகாண ரீதியிலான தரவு பகுப்பாய்வுக்கமைய வடமாகாண மக்கள் மதரீதியான சகிப்பத்தன்மையின்மை தொடர்பான சம்பவங்களைப்பற்றி மிகக்குறைவாக (3.0 என்கின்ற குறைவான புள்ளி) அறிந்திருக்கின்றதாக காட்டுகின்றது. இக்கண்டடைவுகளும் கூட, தனிநபர்கள் வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் வேறு குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்களாக இருந்தால், அவர்களிடத்தில் அதிகளவான புரிந்துணர்வு ஏற்படுவதனாலும், குறைந்தளவிலேயே அச்சுறுத்தப்படும் உணர்வினைக் கொண்டிருப்பதாலும், ஏனையவர்களையும் தமது சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாக இருப்பதாலும் மத சகிப்புத்தன்மையின்மைக்கான அனுபவங்களைக் குறைப்பதாகவும் கலாச்சார புரிதல் மற்றும் சமூக நீதியை மேம்படுத்துகின்றது எனும் எண்ணப்போக்கையே சுட்டிக்காட்டுகின்றன.
பல்கலைக்கழக மாணவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து அவற்றை ஆமோதிக்கும் வகையில் இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய பார்வையாளர்கள் பின்வருமாறு பதிலளித்தனர்:
• வயம்ப பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமூக சமையலறை பற்றி பகிர்ந்துகொண்ட கருத்துக்களின் அடிப்படையில், அவர்களின் பல்கலைக்கழகமும் சமீபத்தில் இதேபோன்ற சவாலை எதிர்கொண்டுள்ளது. பல்கலைக்களகத்தின் மிகப்பெரிய ஒரு கலை நிகழ்ச்சிக்காக, மாணவர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு, அவர்களின் ஊட்டச்சத்து பாதிக்கப்பட்டது. அதற்கு தீர்வாக, அந்தத் துறைக்கென ஒரு சமூக சமையலறை நிறுவப்பட்டது. ஊர்மக்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி ஊழியர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு மாணவர்களே சமூக சமையலறையை பொறுப்பேற்று நடாத்தினர். பல்கலைக்கழக வளாகத்தில் உணவு தயாரிக்கப்பட்டு ஒரு வாரம் முழுவதும் நாடக விழாவுடன் இணைத்து நடத்தப்பட்டது. இது மாணவர்கள், ஊர்மக்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் பாரிய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை வளர்க்க உந்துதல் ஆக அமைந்தது.
• ஸ்ரீ பாலி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பிரதிநிதிகளின் காணொளிகள் பற்றி குறிப்பிடும் பொழுது, அவை அழுத்தமான உள்ளடக்கத்தின் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் வழங்குவதாக குறிப்பிட்டார். சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அவர்களது வீடியோக்களை தமது மாணவர்களுக்கு ஆர்வத்துடன் பரிந்துரைத்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகப் பிரதிநிதிகளின் பணிகளால் ஈர்க்கப்பட்ட அவர், பரீட்சை முடிந்து தங்கள் மாணவர்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு களப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் முஸ்லிம் நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று, இந்துக்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் மற்றும் பர்கர்கள் மத்தியில் இணக்கமான கொண்டாட்டத்தைக் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார். இத்தகைய பிரதிநிதித்துவங்கள் நல்லிணக்க முயற்சிகளில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருப்பதுடன், மேலும் அவை மத சகிப்புத்தன்மையில் நேர்மறைதாக்கத்தை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் முனைப்பான முயற்சிகளை இப்பதிவு வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்கள் நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கிடையில் எவ்வாறு புரிந்துணர்வை மேம்படுத்துவது என்பது குறித்த தங்களது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை சீர்செய்வதற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல், கள விஜயங்கள் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் "சமூக சமையலறை" முயற்சியின் மூலம் மாணவர்களின் உணவுப் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்தல் ஆகியவை கலந்துரையாடப்பட்ட முக்கிய முயற்சிகளாகும். தமிழ் மற்றும் முஸ்லீம் திருமணங்களில் கலந்துகொள்வது போன்ற நேரடி கலாச்சார அனுபவங்கள் மாணவர்களிடையே அதிக கலாச்சார புரிதலை எவ்வாறு ஊக்குவித்தன என்பதையும் இப்பதிவு எடுத்துக்காட்டுகிறது.
அவர்களின் முன்முயற்சிகள் கலாச்சார பன்முகத்தன்மையை அங்கீகரித்து, தேசிய அடையாளத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. வயம்ப மற்றும் ஸ்ரீ பாலி போன்ற பிற பல்கலைக்கழகங்களின் பதில்கள், இலங்கை முழுவதும் இதேபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்கும் இந்த முயற்சிகளின் பரந்த தாக்கத்தையும் சாத்தியத்தையும் விளக்குகிறது. இக்கதைகள், பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் தளங்கள் இரண்டையும் பயன்படுத்தி, நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த, புரிந்துணர்வுள்ள மற்றும் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதில் மாணவர்களின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றன.
Rumana Razzak is a biotechnology graduate whose volunteer experiences in the sociology field sparked her interest in peacebuilding and social change. Transitioning from science to the social sector, she now works as a data analyst in community engagement and research, focusing on social cohesion, identity, and reconciliation in Sri Lanka. Skilled in the three main languages of the country, she is passionate about inclusive storytelling and applies a multidisciplinary approach to her work.